Monday, October 21, 2019

Thirukkuralin Makimai

திருக்குறளின் மகிமை


'அகர முகர எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு' என்று தொடங்கி ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் 'திருக்குறள்' எனும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர். இவர் உலக மக்களால் தெய்வப்புலவர், பொய்யில் புலவர், செந்நாப்புலவர், பெருநாவலர், பொய்யா மொழிப் புலவர் என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றார். திருவள்ளுவர் தன் அறிவாலும் மற்றும் சிந்தனையாலும் அவர் எழுதிய 'திருக்குறள்' உலகப் புகழ் பெற்று இலக்கியமாக மாறி, தமிழர்களுக்குப் பெருமையைத் தேடித் தந்துகொண்டிருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்நூல் வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக உலகப் பொதுமறை, முப்பால், ஈரடி நூல், உத்தர வேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, தமிழ் மறை, திருவள்ளுவம் போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழிக்கின்றனர். ஈரடிகளில் உலகத் தத்துவங்களைச் சொன்னதால் இது ஈரடி நூல் என்றும்; அறம், பொருள், இன்பம் அல்லது காமம் எனும் முப் பெரும் பிரிவுகளைக் கொண்டதால் முப்பால் என்றும் அழைக்கப்படுகின்றது.

இந்நூல் மனிதர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகின்றது. இந்நூல் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. முதற்பிரிவான அறத்துப்பாலில் மனச்சாட்சி மற்றும் மரியாதை நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இரண்டாவது பிரிவான பொருட்பாலில் உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அரணியல், கூழியல், படையியல், நட்பியல், குடியியல்  போன்ற உட்பிரிவுகளில் விளக்குகின்றது. மூன்றாவது பிரிவான காமத்துப்பாலில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையான அன்பு மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற பிரிவுகளில் எடுத்துரைகின்றது. முதற் பிரிவில் 38 அதிகாரங்களும் , இரணடாவது பிரிவில் 70 அதிகாரங்களும் மற்றும் மூன்றாவது பிரிவில் 25 அதிகாரங்களும் உள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 ஈரடிக் குறள் என மொத்தம் 133 அதிகாரங்களில்  1330 குறள்களைக் கொண்டுள்ளது.

திருக்குறளைப் பற்றி ஔவையார் "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்றும்; கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை "வள்ளுவர் தந்த திருமறையைத் - தமிழ் மாதின் இனிய உயர்நிலையை உள்ளம் தெளிவுறப் போற்றுவோமே - என்றும் உத்தம ராகி ஒழுகுவோமே" என்று கூறுகின்றார்கள். திருக்குறளில் உள்ள அனைத்துக் கருத்துக்களும் உலகில் உள்ள அனைத்து சமயங்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானது என்று கணிக்கப்பட்டாலும் இது இயற்றப்பட்ட காலம் இன்றும் சரியாக வரையறுக்கப்படவில்லை. திருவள்ளுவர் மறைந்தாலும் அவர் படைத்த திருக்குறள் என்னும் உன்னத நூல் எக்கால மனிதர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக இருந்து தமிழர்களுக்கு புகழையும், பெருமையையும் உலகளவில் ஓங்கச் செய்கின்றது.


No comments:

Post a Comment