Friday, May 3, 2019

சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரை 1893

Swami Vivekaananthar
சுவாமி விவேகானந்தர் வரவேற்புக்கு மறுமொழி
September 11, 1893

அமெரிக்க சகோதர அகோதரிகளே!

இன்பமும், இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தை இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான  இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பெச்சார்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்." என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கு என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்தவன் நான் என்பதில்  பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்த்தவன் நான் என்பதில் பெருமைப்படுகின்றேன். ரோமானியரின் கொடுமையால் தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்இந்தியாவுக்கு வந்து எங்களிடம்  தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். பெருமைமிக்க சௌராஸ்ஷரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோர்க்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகின்றேன்.

எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம் இறுதியில் கடலில் சென்று
சங்கமாம் பான்மையினைப் போன்று உலகோர் பின்பற்றும் தன்மையாலே
துங்கமிகு நெறிபலவாய் நேராயும் வளைவாயும் தோன்றினாலும்
அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக்கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்:
“யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.”

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமூதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்திருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று கலையில் இந்தப் பேரவையில் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறியர்களுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

சுவாமி விவேகனந்தர்.



சுவாமி விவேகானந்தர் சிகாகோ
நிறைவு நாள்  உரை

சர்வமத மஹாசபை  சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றிவாகை சூட்டியுள்ளார். இந்த கனவை முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றுதல் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி. இந்த் மேடையில் கரைகடந்து வழிந்தோடிய பரந்த உணர்ச்சிப் பொழிவுக்கு நன்றி. என் மீது ஒருமித்த அன்பு காடியதற்காவும், சமயங்களுக்கு  இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என் நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை  மேலும் இனிமை ஆக்கினர்.

மத ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைகளன் பற்றி அதிகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை, ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான் , “சகோதரா! உனது நம்பிக்கை வீண்" என்று சொல்லிக் கொள்கின்றேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! அல்லது இந்துவோ பௌதரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!

விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகிறன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகின்றது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக்கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப்போருளாக மாற்றி, ஒரு செடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர், இந்துவாகவோ பௌதராகவோ மாற வேண்டியதில்லை, அல்லது இந்து, கிறிஸ்தவராகவோ பௌதரகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிகிக் கொண்டு,  தன் தனித் தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.

இந்த சர்வமதப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக் காடியுள்ளது என்றால் அது இதுதான்:

புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதும் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச் சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும், பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சிகளுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள் அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான்  என் இதய  ஆழத்தில் இருந்து பச்சாதாபப் படுவதுடன்,
இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும் "உதவி செய், சண்டை போடதே", “ஒன்றுபடுத்து அழிக்காதே", “சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்" என்று எழுதப்படும் என்று அவருக்குச்  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சுவாமி விவேகனந்தர்.



No comments:

Post a Comment