விநாயகர் அகவல்

vinayagar agaval
Vinayagar


விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல இசை பாடப்
பொன்அரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்து அழகு எறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரும் புயமும்,
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும், இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரிய மெஞ்ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே!
முப்பழம் நுகரும் மூடிக வாகன!

இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந்து அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளந்தனில் புகுந்து

குருவடிவு  ஆகிக் குவலயம் தன்னில்
திருஅடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்

தெவிட்டாத ஞானந் தெளிவையும் காட்டி,
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயமும்
இன்புறு கருணையில் இனிதெனக்கு அருளிக்,
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்து எனக்கு அருளி,
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே,
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்கிசை நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே,
இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி,
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்,

குண்டலி அதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து,
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி,
இடைச் சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையூம் காட்டிச்,
சண்முக தூலமும் சதுர் முகச் சூக்கமும்
என்முகம் ஆக இனிதெனக்கு அருளிப்,

புரியட்ட காயம் புலக்கட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்,
கருத்தினில் கபால வாயில் காட்டி,
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி,
என்னை அறிவித்து எனக்கு அருள்செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்தே,
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தி, என்செவியில்

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச்,
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்,
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி,
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்,
கூடுமெய்த் தொண்டர்  குழாத்துடன் கூட்டி,
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத்,
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட
வித்தக! விநாயக! விரைகழல் சரணே.


ஒளவையார்

1 comment: